Tuesday, March 6, 2018

80- சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள் வேங்கடத்து

சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே

சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள்-சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர் மேகங்களே

வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்-செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பத்தை வையுங்கள்

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்-என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் அணைத்து என்னை சேருகின்ற நாளில்தான்

தங்குமேல் என் ஆவி தங்கும்  என்று உரையீரே-என் உயிர் தங்கும் என அவ்ரிடம் சொல்லிவிடுங்கள்

சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் திருவேங்கடத்தில் இருக்கும் குளிர் மேகங்களே!செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பத்தை வையுங்கள்.என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் என்னை அணைக்கு நாள்தான், என் உயிர் தங்கும் என அவரிடம் சொல்லிவிடுங்கள் (அதுவரை நடைப்பிணம் தான்  நான்)


No comments:

Post a Comment