Thursday, February 8, 2018

7 - காயுடை நெல்லோடு கரும்பமைத்து

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் 
கட்டி யரிசி யவலமைத்து,
வாயுடை மறையவர் மந்திரத்தால்
 மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்,
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் 
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறுமென் தடமுலையும் 
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.

காய் உடை நெல்லோடு கரும்பமைத்து- பச்சை நெல்லோடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவல் அமைத்து- அதைக் கட்டி சுற்றி அரிசி,அவலும் வைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்- வேதம் ஓதுபவர்கள் சொல்லும் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகிறேன்-மன்மதனே உன்னை வணங்குகிறேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்-உலகளந்த திருவிக்கிரமன்
திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்- திருக்கைகளால் என்னைத் தொடும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்-சாய்ந்த என் வயிறும் , பெருத்த கொங்கைகளும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே-கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே புகழ் பெற எனக்கு அருள் செய்துவிடு

மன்மதா! பால் பிடிக்கும் பச்சை நெல்லுடன் கரும்பமைத்து, அத்துடன் அரிசியும், அவலும் வைத்து நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் உன்னை வணங்குகிறேன்.
மூவுலகிற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாய்ந்த என் வயிறும்,பெரிய என் மார்பகங்களும். கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே பெரும் புகழ் அடைய நீ அருள்வாயாக

No comments:

Post a Comment