Thursday, February 15, 2018

19- முற்றத்தூடு புகுந்துநின் முகம்

முற்றத்தூடு புகுந்துநின் முகம்
காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாயெம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ  ரெஞ்சொல்லார்

முற்றத்து ஊடு புகுந்து-முற்றத்திலே ஊடாக புகுந்து
நின்முகம் காட்டி புன்முறுவல் செய்து-உன் மகத்தினைக்காட்டி புன்னகை செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்- எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்களது சிந்தனையையும்
சிதைக்கக் கடவையோ கோவிந்தா-சிதைக்கலாமா கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி- முழுவதுமாக மண் இடம் தாவி
விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்-வானம் அளந்து கால் நீட்டி மொத்தமும் அளந்தாய்
எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்-எங்களைப் பிடித்து உடல்மீது மல்லுக்கட்டி சண்டையிட்டாய்
இந்தப்பக்கம் நின்று அவர் எஞ்சொல்லார்-இதைப் பார்க்கும் என் வீட்டார் என்ன சொல்லுவார்கள்?

முற்றத்தில், நடுவே புகுந்து, உன் முகம் காட்டிப் புன்னகை செய்து, எங்கள் சிறு மணல் வீட்டுடன், எங்களது சிந்தையையும் சிதைக்கும், கோவிந்தா..மண் முழுதுமாக அளந்து,பின் கால் நீட்டி, வானம் அளந்து..மொத்தமும் அளந்தாய்.நாங்கள் கட்டிய வீட்டை இடிக்க நீ வர, அதை நாங்கள் தடுக்க முனைய, எங்களைப் பிடித்து, கட்டிப் புரண்டு சண்டையிட்டாய்,இதைப் பார்க்கும் என் வீட்டினர் என்ன சொல்லுவார்கள்?

No comments:

Post a Comment